Thursday 11 August 2011

ஈழத் தமிழர்களுக��கு சம வாழ்வும் க��டைக்கும் வரை அரசு ஓயாது: ஜெயல‌லிதா



இலங்கை‌த் தமிழர்களுக்கு மறுவாழ்வும், சிங்களர்களுக்கு இணையான சம வாழ்வும் கிடைக்கும் வரை என் தலைமையிலான அரசு ஓயாது என்றும், தமிழர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்கும் வரையிலும் தமது அரசு ராஜதந்திர நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

சட்ட‌ப்பேரவையில் கடந்த 8.6.11 அன்று இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச கண்டித்திருந்தார். அவருடைய செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க), சௌந்தரராஜன் (சி.பி.எம்), குணசேகரன் (சி.பி.ஐ), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசின‌ர்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகை‌யி‌ல், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது இலங்கை அரசு மனிதாபிமான, ஈவுஇரக்கமின்றி ராணுவ தாக்குதலை நடத்தியதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போனார்கள். இதையொட்டி என்னுடைய தலைமையிலான அரசு இனப்படுகொலைகளை நடத்திய போர்க் குற்றவாளியாக இலங்கை அரசு அறிவிக்க ஐ.நா. மன்றத்தை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வும், சமஉரிமையும் கிடைக்கிற வரையில் அந்நாட்டின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த 8.6.11ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலரான கோத்தபய ராஜபக்ச ஒரு தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் விமர்சித்துள்ளார்.தாங்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்துவது போல பேசியிருக்கிறார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே நான் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் இந்தோனேஷியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 3 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்பி இந்த குழுவினர் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்ல.

இலங்கையில் உள்ள சிங்களர்களும், தமிழர்களும், இஸ்லாமியர்களும் எந்தவித பாகுபாடுமின்றி நல்ல முறையில் வாழ்வதாகவும், மற்றவர்களை விட தங்கள் மக்களின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாகவும் அந்த இலங்கை அமைச்சர் பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும்.

உச்சக்கட்ட போர் நடைபெற்ற செப்டம்பர் 2008 மற்றும் மே 2009 கால கட்டங்களில் பலமுறை துப்பாக்கிச்சூடுகள் நடத்தி அப்பாவித் தமிழர்கள் கொன்று குவித்ததாக ஐ.நா. மன்றத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.குண்டுவீச்சு நடத்தக் கூடாது என்று விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்கியுள்ளனர். மனிதாபிமான முறையில் அனுப்பப்பட்ட உதவிகளையும் அவர்களுக்கு சேர விடாமல் தடுத்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட மிக பயங்கரமான ஆயுதங்களை கொண்டும், குண்டுமழை வீசி பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்திருப்பதாகவும், நிவாரணப் பொருட்களை தடுத்ததாகவும் அந்த குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் கோரமான வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு அதில் கொடிய முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதும் வெளிவந்திருக்கிறதே?

இலங்கையின் கடற்பகுதியில் மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் கோத்த பய ராஜபக்ச அறிவுரை வழங்கியிருக்கிறார். கச்சத்தீவு பகுதியில் எஞ்சிய மீனவர்கள் புனித பயணம் மேற்கொள்ளலா‌ம், இந்திய மீனவர்கள் அந்தப் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம். கச்சத்தீவில் வலைகள் உயர்த்தலாம் என்றெல்லாம் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி செயல்படுவது இலங்கைதான்.

இந்த நிலையில் இலங்கையின் அயலுறவுச் செயலாளர் இதற்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்டு தமக்கு அறிவுரை வழங்குவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமாகும்.

வட தமிழ் பகுதிகளில் மறுவாழ்வுக்கான முக்கிய பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மறுவாழ்வு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அவர் அளித்துள்ள டிவி பேட்டி மூலம் இலங்கை போர்க் குற்றம் செய்திருக்கிறது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தை சந்திக்க தயார் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். மாறாக இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை மறைக்கும் முயற்சியில்தான் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அனைத்துக் கட்சி கூட்டம், பிரதமருக்கு தந்தி, மனித சங்கிலி, எம்.பி.க்கள் ராஜினாமா என்றெல்லாம் பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை நடத்தியபோது அது பற்றி வாய் திறக்காத கோத்தபய ராஜபக்ச என்னுடைய தீர்மானத்தை தாக்கி பேசுவது என்பது இந்த தீர்மானம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அனைவரும் அறியலாம்.

சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எனவே இந்திய அரசும், இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்கு சென்று சிங்களர்களுக்கு இணையாக வாழும் வரையிலும் மற்ற நாடுகளோடு இணைந்து மத்திய அரசு அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற இந்த அரசின் தீர்மானம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனவே இதன் மீது இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்தான் கோத்தபய ராஜபக்ச இது போன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வும், சிங்களர்களுக்கு இணையான சம வாழ்வும் கிடைக்கும் வரை என் தலைமையிலான அரசு ஓயாது. இலங்கை தமிழர்களுக்கான நியாய உரிமையை வென்றெடுக்கும் வரை எங்களின் ராஜதந்திர நடவடிக்கை தொடரும். தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது என்று கருத்து தெரிவித்த கோத்தபய ராஜபக்சவுக்கு மத்திய அரசு இந்திய தூதர்கள் மூலம் தம்முடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டு‌ம் எ‌ன்று ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

http://veryhotstills.blogspot.com/




  • http://veryhotstills.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger