Tuesday 3 March 2015

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன? Symptoms of Swine Flu

- 0 comments

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது '' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை.

ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது. 2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் 'A' ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.

மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?

மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.

கடந்த காலங்களில் இந்நோய் வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..

இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?

இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.

 

நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.

 

ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.

ஸ்வைன் நோய் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ.....

இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.

தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.

கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.

இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்

உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

 

இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

உங்களுக்கு இந்நோய் இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.

இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும்.

ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.

நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?

அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர் அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர் இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும் காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.

குழந்தைகளாக இருப்பின்....

வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.

தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.

அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.

குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.

ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.

தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்

பெரியவர்களுக்கு.........

சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்

மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு

தீடீர் மயக்கம்.

தடுமாற்றம்.

H1N1 வைரஸ் பொது அறிகுறிகள் மற்றும் தற்காப்பு செயல்பாடுகள்

H1N1 வைரஸ் உலக மக்கள் சமுதாயத்திடையே மிகுந்த பீதியை கிளப்பிவிட்டது. இந்த உயிர்க்கொல்லி நோயின் அறிகுறிகள் சாதாரண சளிக்காய்ச்சல் அறிகுறிகளையே ஒத்திருக்கின்றன. கிழ்க்குறிப்பிட்டுள்ள சுலபமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்..

H1N1 காய்ச்சல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்

சாதாரண சளி காய்ச்சல் போல் அல்லாது அதிக அளவு காய்ச்சல் சில நோயாளிகளிடம் இந்த அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்.

வறட்டு இருமல்

மூக்கு அடைப்பு (அ) ஒழுகுதல்

தொண்டை புண்

உடல் வலி

குளிர் நடுக்கம்

வழக்கத்திற்கு மாறான அதிகளவு களைப்பு

குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு

முற்றிய பன்றிக்காய்ச்சலால் நிமோனியா மற்றும் நுரையீரல் செயலிழத்தல் ஏற்படலாம்.

H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உலகெங்கும் பரவிய உயிர்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் இந்திய மன்னில் வந்தடைந்து பல உயிர்களை குடித்திருக்கிறது. இந்த நோய் வருமுன் காப்பதற்கு சில விதிமுறைகளை பின்பற்றுதல் போதுமானது. படி அளவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மரக்கால் அளவிற்கு நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து ஆலோசனைகளைப் பின்பற்றி பன்றிக் காய்ச்சல் தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு H1N1 வைரஸ் தாக்கியிருப்பதாக உணர்ந்தால், கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களான பள்ளி மற்றும் அலுவலகம் செல்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி சோப்பு கொண்டு நன்றாக நுரைக்க சோப்பிட்டு (குறைந்தபட்சம் 15 நொடிகள்) ஓடும் தண்ணீரில் கழுவவும்.

இரவில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.

தினமும் குறைந்தபட்சம் 8 அல்லது 10 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் அது வறட்சி ஏற்படாமல் குழிவுகளில் எச்சில்/சளி ஊற செய்யும்.

இருமல் மற்றும் தும்மல் வரும்போது மெல்லிய உறிஞ்சும் தன்மை கொண்ட காகிதத்தால் வாயை மூடிக்கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக் கிருமிகள் யாருக்கும் பரவாமல் தடுக்கலாம்.

கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை கைகளால் தொடுவதை தவிற்பதன் முலம் பரவுவதை தவிற்கலாம்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள (அ) பாதிக்கப்பட்ட நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு கவணித்தல் வேண்டும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் / உடலை வலிமையுடன் பேணவும் / முழுதானியங்கள், பல்வகை வண்ணக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை உண்ணவும்.

தெரிந்துக்கொள்க:

இத்தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்நோய்க்கு எதிரான வழிகாட்டிகள் அவ்வபோது பிரசுரிக்கப்படுகிறது. நோய் பற்றிய அவ்வபோது வெளிவரும் புதிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன்படி முறையாக செயல்படுதல் வேண்டும்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger