Tuesday 18 October 2011

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் வங்கி லாக்கர்களில் 'புதையல்'?- விசாரணை!

 
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களில் சிலரின் வங்கி லாக்கர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவற்றை லஞ்ச ஒழிப்பு்ப போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் மீதும் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்ததாகவும், தேர்வுகளில் பல முறைகேடுகளைச் செய்ததாகவும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 14 பேரின் வீடுகளிலும், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வீடுகளிலிருந்து கத்தை கத்தையாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலும் பல கோப்புகள் சிக்கின.
 
வீடுகளில் நடத்திய சோதனையின்போது சில உறுப்பினர்களுக்கு வங்கிகளில் லாக்கர்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றின் சாவிகளை போலீஸார் கைப்பற்றினர். இதில் ரவி என்ற உறுப்பினரின் லாக்கர் இன்று திறந்து சோதனையிடப்பட்டது. இவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சக்தி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் லாக்கர் உள்ளது. அங்கு இன்று பிற்பகல் சென்ற அதிகாரிகள் குழு ரவி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டது. அதில் என்ன சிக்கியது என்பது தெரியவில்லை.
 
மற்றவர்களின் லாக்கர்களையும் திறந்து பார்க்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆய்வுக்குப் பின்னர் இதுகுறித்த விரிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் தமிழக அரசிடம் வழங்கப்படும். அதன் பின்னர் 14 பேரையும் நேரில் வரவழைத்து விசாரித்து தேவைப்பட்டால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger