Wednesday 28 September 2011

முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவருடன் செல்ல கோர்ட் அனுமதி

 
 
 
எனது திருமணம் முறைப்படி நடந்துள்ளதாலும், பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் எனது கணவருடன் செல்வதற்குத் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டதாக வீரப்பனின் மகள் வித்யா ராணி தெரிவித்துள்ளார்.
 
வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவர் வித்யா ராணி, 2வது மகள் பிரபா. வித்யாராணிக்கு 21 வயதாகிறது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்தார். அவரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 23 வயதான மரியதீபக்கும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து குடும்பமும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில்தான் வித்யாராணியை அவரது தாயார் முத்துலட்சுமி தனது வீட்டோடு அடைத்து வைத்து விட்டதாக மரிய தீபக் குற்றம் சாட்டியிருந்தார்.
 
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில்,
 
நான், சென்னை லயோலா கல்லூரியில் படித்தேன். வீரப்பனின் மகள் வித்யாராணி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் படித்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம்.
 
அதைத் தொடர்ந்து 30.3.11 அன்று இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 26.4.11 அன்று பதிவு செய்தோம். திருமண வாழ்க்கை சந்தோஷமாக நடந்தது.
 
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரியில் வீரப்பனின் சமாதி நிகழ்ச்சிக்காக 25.8.11 அன்று வித்யாராணியை அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அவர் வித்யாராணியை அனுப்பவில்லை.
 
எங்களது கலப்புத் திருமணத்தை உடைப்பதற்கு முத்துலட்சுமி விரும்புகிறார். எனவே சட்டவிரோதமாக அவரை முத்துலட்சுமி அடைத்து வைத்துள்ளார். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனருக்கு 29.8.11 அன்று தந்தி கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
எனவே முத்துலட்சுமியிடம் இருந்து வித்யாராணியை மீட்டு என்னிடம் ஒப்படைக்க செம்பியம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
 
2 வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வித்யாராணியை நேரில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அந்த சமயத்தில் வித்யாராணி, வீரப்பனின் மகள் என்று யாருக்கும் தெரியாது.
 
போலீஸார் கோர்ட் உத்தரவை செயல்படுத்த முனைந்தபோதுதான் வித்யாராணி வீரப்பனின் மகள் என்று தெரிய வந்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் நேற்று பலத்த பாதுகாப்புடன் வித்யாராணி உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
 
ஆனால் அவர் வரத் தாமதமானதால் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து விசாரணைக்காக வந்திருந்த மரிய தீபக்கை தனியாக சந்தித்து அவர் பேசினார்.
 
பின்னர் கூடுதல் அரசு வக்கீல் மகாராஜன் கூறுகையில், வித்யாராணி தாமதமாக கொண்டு வரப்பட்டதால் அவரை நீதிபதிகள் முன்பு நிறுத்த முடியவில்லை. புதன்கிழமை அவர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
 
இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு வித்யா ராணி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வித்யா ராணி, தான் கணவர் மரிய தீபக்குடன் சேர்ந்து வசிக்க விரும்புவதாக தெரிவித்தார். பின்னர் வெளியே வந்தார் வித்யாராணி.
 
அப்போது வித்யாராணியும், தீபக்க்கும் செய்தியாளர்களைச் சந்தி்ததனர். அவர்களிடம் வித்யா ராணி பேசுகையில், நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். எனது கணவருடன்தான் வசிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். உங்களது விருப்பம் போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அதற்கு நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
எனது திருமணத்தை எனது தாயார் முத்துலட்சுமி அங்கீகரிக்கவில்லை. இதனால்தான் அவரிடம் சம்மதம் பெறுவதற்காக ஊருக்குப் போனேன். ஆனால் என்னை வீட்டை விட்டு வெளியே போக விடவில்லை அவர். இதனால்தான் எனது கணவர் மூலம் நான் ஹேபியஸ் கார்பஸ் வழக்குத் தொடர்ந்தேன் என்றார் வித்யா ராணி.

 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger