Monday 3 October 2011

ஆமா, நான் கோபக்காரன்தான்: விஜயகாந்த்

 
 
 
தவறு நடப்பதைப் பார்த்தால் கோபப்படுகிறேன். அதற்காக என்னை கோபக்காரன் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும் என்று தேமுதிக தலைவரும், எதிரிகட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தனது கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது,
 
மக்களி்ன் தேவைகளை அறிந்து செயல்படும் கட்சி தேமுதிக. என்னை கோபக்காரன் என்கிறார்கள். அது உண்மை தான். தவறு நடப்பதைப் பார்த்தால் நான் கோபப்படுவேன். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.
 
உங்களுக்கு நன்மை செய்ய தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள். நாட்டில் நல்லவை நடக்க, உள்ளாட்சி நல்லவிதமாக நடக்க தேமுதிகவுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு நல்லது செய்ய எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
 
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். ஓடி, ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்ற நோக்த்தோடு தான் நாங்கள் செயல்படுகிறோம்.
 
தமிழகத்தி்ல தொடர்ச்சியாக 1 மணி நேரம் மழை பெய்தால் தெருவில் நடக்க முடியவில்லை. குண்டும், குழியுமாக உள்ளது. எங்களுக்கு வாக்களித்துப் பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். இன்று எங்களைப் பார்த்து பலருக்கும் பயம் வந்துள்ளது. என் கட்சிக்காரனே தவறு செய்தால் கூட நான் சும்மாவிட மாட்டேன்.
 
எதிர்கட்சியினர் ஜாதி, மதப் பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர். இங்கு இவ்வளவு பேர் நிற்கிறீ்ர்களே நீங்கள் விடும் மூச்சில் ஜாதி, மதம் தெரிகிறதா? இல்லையே. மனிதன் இறந்தால் வெறும் 6-க்கு 3 குழி தான்.
 
அப்படி இருக்கையில் ஊழல் செய்து என்ன வாழப்போகிறீர்கள். தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்கள். மத்தியில் ஊழல் செய்தவர்களுக்கு ஞாபகமறதி நோய் வந்துள்ளது.
 
ஒரு நாள் தேமுதிக தமிழகத்தின் நம்பர் 1 கட்சியாகும். 1 எம்.எல்.ஏ.வுடன் துவங்கப்பட்ட எங்கள் கட்சிக்கு இன்று 29 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இனியும் நாங்கள் வளர்வோம்.
 
மீனவர்கள் பிரச்சனைக்காக ராமோஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். ஆனால் இன்னமும் மீனவர்கள் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இலங்கை கடற்படையின் அட்டூழியம் நீடிக்கத் தான் செய்கிறது. அதைப் பார்த்தும் மத்திய-மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மகாத்மா காந்தியடிகள் ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் ஊழல் தான் உள்ளது. மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க மக்களே கூடி உருவாக்குவது தான் உள்ளாட்சி.
 
படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஏழைத் தாயாமார்களிடம் தாங்கும் சக்தி மட்டுமே உள்ளது. லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் வாங்கும் சக்தி உள்ளது என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger