Monday 15 August 2011

பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக் கொண்டி��ுக்கிறது: மு.க.ஸ்���ாலின் பேச்சு




சென்னை ஆவடியில் தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

1977ம் ஆண்டு தேர்தலில் தோற்ற தி.மு.க. 13 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிற்கே வர முடியவில்லை. அதன்பின்னர் 1989 ம் ஆண்டு மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையிலே ஆட்சிக்கு வந்தோம். 2 ஆண்டுகளிலேயே நம்மீது அபாண்ட குற்றச்சாட்டை சொல்லி ஆட்சியை கலைத்தார்கள். அடுத்து வந்த தேர்தலில் நம்மீது அபாண்டமான கொலைப் பழி சுமத்தப்பட்டு அந்த தேர்தலில் தலைவர் கருணாநிதியை தவிர அனைவரும் தோற்று மோசமான தோல்வியை சந்தித்தோம். அதிலும், கருணாநிதிக்கு ஒரு பெருமை உண்டு. இதுவரையில் தேர்தலில் நின்று தோற்ற வரலாறே அவருக்கு கிடையாது.


அதற்கு பிறகு 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையா? அதற்கு பிறகு 2001 ல் தோற்றோம். மீண்டும் 2006 ல் ஆட்சிக்கு வந்தோம். இப்போது 2011 ல் தோற்று இருக்கிறோம். மீண்டும் 2016 ல் தேர்தல் வரும், ஏன் அதற்கு முன்பே கூட தேர்தல் வரலாம். நாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்று அலையவில்லை. அது பதவிக்காக அல்ல. மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டிற்காக. இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தி.மு.க. எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தது உண்டு. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதி உழைத்து கொண்டிருக்கக் கூடிய ஒரே இயக்கம் தான் தி.மு.க.


இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்கள்? முதன்முதலில், சமச்சீர் கல்வி ரத்து என்பதைத்தான் கொண்டு வந்தார்கள். அதை உச்சநீதிமன்றமே தவறு என்று தீர்ப்பளித்து, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல, மற்றொரு காரியம் மக்கள் வரிப்பணத்திலே கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மூடியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவோம் என்றார்கள். ஆனால், இன்றைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாமல் செய்தியே கிடையாது.


தி.மு.கவினர் மீது பல வழக்குகள் போடப்படுகின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், சிவாஜி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம். என்.கே.கே.பி.ராஜா என பலர் மீது வழக்கு போடுகிறார்கள். பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? பள்ளிக்குச் சென்ற ஒரு மாணவனை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து, பாடங்களை படிக்க விடாமல் செய்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. கலைவாணன் அந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று, பாளைச் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவர் மீது இன்னொரு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள். ஆட்சிக்கு வந்த 3 மாதத்திலேயே இத்தனை அராஜகங்கள், அக்கிரமங்கள் நடக்கிறதென்றால் அதற்கெல்லாம் பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


சட்டமன்றத்தில் நாம் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுகின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, மக்கள் மன்றம் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய உணர்வோடு தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.








http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger