Friday 23 September 2011

அத்தனை இடங்களிலும் அதிமுகவை டெபாசிட் இழக்க வைப்போம்- தேமுதிகவினர் சபதம்!

 
 
 
 
 
எங்களை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டது அதிமுக. எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிடும் அத்தனை இடங்களிலும் அவர்களைத் தோற்கடிப்பது மட்டுமல்ல, டெபாசிட் இழக்க வைத்து நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம் என்று தேமுதிகவினர் ஆவேசமாக கூறியுள்ளனர்.
 
 
 
போன மச்சான் திரும்பி வந்தான் கதையாக மாறி விட்டது தேமுதிகவின் நிலை. சொந்தக் காலிலியே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற வாடகை வாகனத்தில் ஏறி வசதியாக சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் அதிமுகவின் போக்கால் இப்போது அந்தக் கட்சி நடு ரோட்டுக்கு வந்துள்ளது-மீண்டும்.
 
 
 
ஒப்புக்காக சில இடங்களைக் கூட தராமல் 'ஒட்டுக்கா' அத்தனை இடங்களையும் எடுத்துக் கொண்ட அதிமுகவின் முகத்தில் அடித்த செயலால் தேமுதிகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
 
இன்று தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்ததை சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கல்யாண மண்டப வளாகத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தேமுதிகவினர் வரவேற்று கொண்டாடினர்.
 
 
 
அவர்கள் கூறுகையில், தனித்துப் போட்டியிடுவது என்பது எங்களுக்குப் புதிதல்ல. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தனித்தே செயல்பட்டு வந்துள்ளோம். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே இது எங்களுக்குப் புதிதல்ல.
 
 
 
புரட்சிக் கலைஞர் கூறியதால்தான் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால் எங்களை முதுகில் குத்தி விட்டது அதிமுக. இந்தத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து நாங்கள் போட்டியிடப் போகிறோம். அவர்களை தோற்கடிப்பதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் இழக்க வைத்து நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம் என்றனர்.
 
 
 
அதிமுகவின் புறக்கணிப்பு குறித்து அமைதி காத்து வந்த விஜயகாந்த், அதிமுகவுக்கு எதிராக தனது கட்சியினர் மத்தியில் நிலவி வந்த கொந்தளிப்பை உணர்ந்தே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger