Saturday 11 February 2012

சச்சின் இல்லாமல் சாதிக்க முடியுமா?

 

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் வெற்றியில் சச்சின் பங்கு அதிகம். இவருக்கு, முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் ஓய்வு கொடுத்தால், வெற்றி வசப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில், ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தருவதில், இந்திய கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இவருக்காக "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 
இதன்படி முதலிரண்டு போட்டிகளில் சேவக், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
 
புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 22 ஆண்டுகளில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் தான் வென்றுள்ளது. இதில் சச்சின் பங்கு தான் அதிகம்.
 
 
முதல் வெற்றி:
 
1991-92ல் பெர்த் போட்டியில் இந்திய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதில் சச்சின் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் (36 ரன்கள், 65 பந்து). அடுத்து 12 ஆண்டுகளாக 11 போட்டிகளில் தொடர் தோல்வி. 2003-04ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இப்போட்டியில் சச்சின் 86 ரன்கள் எடுத்தார்.
 
 
பைனல் அசத்தல்:
 
பின் வந்த மூன்று வெற்றிகளும் கடந்த 2007-08 தொடரில் கிடைத்தது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் 159 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு, 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார் சச்சின்.
 
பின் நடந்த முதல் பைனலில் ஆஸ்திரேலியாவின் 240 ரன்கள் என்ற இலக்கை அடைய, சச்சின் சதம் அடித்து (117 ரன்கள்) உதவினார். தொடர்ந்து இரண்டாவது பைனலில், 91 ரன்கள் எடுத்து அசத்தினார்.
 
 
சேவக் மோசம்:
 
சேவக்கை எடுத்துக் கொண்டால், மூன்று தொடர்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 10 போட்டிகளில், 180 ரன்கள் மட்டுமே எடுத்தார். காம்பிர் பரவாயில்லை ரகத்தில் உள்ளார். இவர் கடந்த தொடரில் சிட்னியில் அடித்த சதம் (113) உட்பட, 7 போட்டியில் 230 ரன்கள் எடுத்துள்ளார்.
 
விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா, மனோஜ் திவாரி ஆகியோர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 10 போட்டிகளில் கூட பங்கேற்றதில்லை. கடந்த 2008 தொடரின் முதல் பைனலில் ரோகித் சர்மா, அரைசதம் அடித்தது தான் அதிகம்.
 
இதன் பின் இந்த அணிக்கு எதிரான 7 போட்டிகளில் மொத்தமே 37 ரன்கள் தான் எடுத்தார். எனவே, சுழற்சி முறை வீரர்கள் தேர்வு பற்றி தோனி நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

 
எது முக்கியம்
 
வரும் 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனை மனதில் கொண்டு, இப்போதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், இங்குள்ள ஆடுகளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வர்.
 
சுழற்சி முறையில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கும் போது, சச்சினுக்கு சலுகை காட்ட தேவையில்லை. இவர் 100வது சதம் அடிக்க வேண்டும் என்பதைவிட அணியின் நலன் தான் மிகவும் முக்கியம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger