Wednesday 10 August 2011

என்னத்த சொல்லு��து..?



09-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
 அப்போதுதான் அலுவலகம் வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது.. முதலில் சுர்றென்று மண்டையில் ஏறியது வலி. அதன் தொடர்ச்சியாக தலையின் அனைத்துப் பக்கங்களிலும் விர்றென்ற வலி கூடியது. தலையைச் சற்றுக் குனிந்தபோது விசுக்கென்று ஒரு வலி.. ஒரு அலையே வந்து பின் பக்கத் தலையில் முட்டியதுபோல். தாங்க முடியவில்லை. சில நொடிகளில் விடைபெற்றது.

அடுத்து எந்தப் பக்கம் திரும்பினாலும் அதே போன்று வலிகள். இந்த 40 வயதில் இதுவரையில் எப்போதுமில்லாத வலி அது. சேரில் இருந்து எழுந்தவன் உட்கார்வதற்கே முடியவில்லை. தலையைக் குனிந்த நிமிடத்தில் தண்ணீர் அலம்புவதைப் போல அலை வந்து தாக்கியது. "அம்மா" என்று கதறலுடன் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது.

இனிமேலும் தாங்காது என்ற நிலைமை வந்தவுடன் அலுவலகத்தைவிட்டு ஓட வேண்டும்போல் தோன்றியது. அதையேதான் செய்தேன். நேராக ஆஸ்தான மருத்துவர். இடுப்பில் ஒரு ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளை கொடுத்துவிட்டு "தலையில் நீர் தேங்கியுள்ளது. அடிக்கடி ஆவி பிடியுங்கள்" என்பதுடன் முடிந்தது அவரது அட்வைஸ்.

வீட்டுக்கு வந்து தலையைச் சாய்த்தால் அடங்கவில்லை வலி. படுத்தாலும் வலி. எழுந்தாலும் வலி என்று பாடாய்ப்படுத்திவிட்டது. அலுவலகத்தில் தொடர்ச்சியான 2 நாட்கள் லீவு என்றாகி மாத்திரைகளின் வீரியத்தினாலும், தினம்தோறும் எனது இடுப்பை பதம் பார்த்த ஊசிகளின் மகிமையினாலும் கொஞ்சம் பணிந்த்து வலி.

அடுத்த நாள் மாலை தம்பி வெட்டோத்தி சுந்தரம் பட விழாவுக்கு அழைக்க வீட்டுக்கு வந்த இயக்குநர் வடிவுடையான் என் நிலைமையைப் பார்த்து அவரே கடைக்கு ஓடிப் போய் டிராகன் என்னும் மருந்தை வாங்கி வந்து கொடுத்தார். இப்போதுவரையிலும் அதுதான் எனக்கு உற்ற துணைவன்..! அறிமுகப்படுத்திய நண்பர் வடிவுடையானுக்கு நன்றி..

இந்தத் தலைவலியுடனேயே அடுத்து வந்த அத்தனை நாட்களும் அலைய வேண்டியதாகிவிட்டது. ரோட்டில் எச்சில் துப்புவது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அதனை வம்படியாகச் செய்யும்படியாகிவிட்டது. நான் போட்ட மாத்திரைகளின் பணியே சளியை வெளியேற்றுவதுதானாம். அது இருந்தால் இன்னும் தலைவலி கூடும் என்ற மருத்துவரின் எச்சரிக்கையால் செய்யப் பிடிக்காத "அந்த" செயலை சில நாட்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. எனக்கே வெட்கமாகத்தான் இருந்தது. இருக்கிறது.

அலுவலகத்தில் மிக நேராக ஏஸி காற்று எனது தலையில்தான் வீசுகிறது. அலுவலகத்தில் என்னைத் தவிர அத்தனை பேரும் ஜெர்கின் போட்டுச் சமாளிக்கிறார்கள். நான்தான் எதையும் சமாளிப்போம்ல என்று நக்கல் அடித்துவிட்டு இப்போது கண்ணீர் விடுகிறேன்.

அடிக்கிற ஏஸியில், 5 நிமிடத்தில் பாட்டில் தண்ணீர் ஜில்லென்றாகிறது. இதில் ஐஸ் வாட்டர் குடிக்க்க் கூடாது என்றால் எப்படி? இருக்கிற தண்ணீரே அப்படித்தான். ஒவ்வொரு தடவையும் சுடுதண்ணீர் வைத்து குடிக்கவும் சோம்பேறித்தனம். விட்டுவிட்ட வந்த வலி மீண்டும் சூடு பிடித்தது இந்த வாரம்.

சனிக்கிழமையன்று காலை பிடித்த தலைவலி கர்மம் மதியத்திற்குமேல் உச்சத்திற்குச் சென்றது. எங்காவது தலையை முட்டிக் கொண்டால்தான் நிம்மதி என்ற நிலையில் மறுபடியும் மருத்துவர். இம்முறை வேறு மாத்திரைகள். ஊசி. இவற்றுடன் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. அன்று இரவு அழையா விருந்தாளியாக குளிர் காய்ச்சல். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அடித்துப் போட்டுவிட்டது.

மறுநாள் காலை மீண்டும் மருத்துவர். புதிய ஊசி. புதிய மாத்திரைகள். போதுமடா சாமி என்றாகிவிட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக இப்போது காய்ச்சலும் வந்து அதுவும் மெதுவாகி, பின்பு வயிற்று வலி வந்தது. அது வயிற்று வலியா அல்லது வயிற்று பசியா என்றே தெரியவில்லை. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. ஆனால் ஒரு கவளம் சோற்றை வாயில் போட்டவுடன், உள்ளே போகவில்லை. ம்ஹூம்.. இது சரிப்படாது என்றெண்ணி ஆபத்துக்குப் பாவமில்லை என்ற ரீதியில் பிரெட் பாக்கெட்டை வாங்கி 4 பிரெட்டுகளை அள்ளி வாயில் போட்டு அரை சொம்பு பாலைக் குடித்துவிட்டு படுத்தேன்.

திங்கள்கிழமை ஆபீஸுக்கு போயே ஆகணுமே என்ற நினைப்பில் எழுந்தவனுக்கு எதுவும் தெரியவில்லை. எல்லாம் நன்றாகவே தெரிந்தது. ஒரு காபியை குடித்துவிட்டு சலூன் கடையில் சவரம் செய்துவிட்டு அலுவலகம் கிளம்புவோமாக என்றெண்ணி காபி கடையில் காபியை வாங்கி ஒரு சிப் அருந்தியவனின் தலை நொடியில் 180 டிகிரியில் சுற்றத் தொடங்கியது. கையில் வைத்திருந்த தினத்தந்தியின் செய்திகளெல்லாம் தாறுமாறாக எனது விழித்திரையில் ஓடத் துவங்கின..

நிலைமை புரிந்தது. இது போன்ற எத்தனையோ சுற்றல்களைத்தான் பார்த்தாச்சே. காபி குடிக்க வந்த சலூன் கடைக்கார அண்ணனின் கையைப் பிடித்திழுத்து, "வீடுவரைக்கும் துணைக்கு வாண்ணே.." என்றழைத்து ஒரு பத்தடி நடந்திருப்பேன். அதற்கு மேல் என் கால்களுக்குச் சக்தியில்லை. அப்படியே பொத்தென்று விழுந்தது நினைவிருக்கிறது.

அப்புறம் மெள்ள கண்ணைத் தொறந்து பார்த்தபோது சுற்றிலும் கால்வாசி பிரேமில் மனித முகங்களாகத் தென்பட்டு அதிலும் அதிகம் நான் பார்த்திருந்த எனது எதிர்வீட்டு அம்மா என் கன்னத்தைத் தட்டிக் கொடுப்பது லேசாகத் தெரிந்தது.

யாரோ சிலர் என்னைத் தூக்கி ரோட்டு ஓரமாக உக்கார வைத்திருந்தார்கள். யாருடைய கால்களிலோ நான் வசதியாக சாய்ந்து படுத்திருந்தேன். யாரோ ஒரு நண்பர் முகத்தில் தண்ணீரை அடித்தார்.. வாயில் தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்ததுதான் தெரியும். முழுவதையும் குடித்துவிட்டுத்தான் சொம்பை விட்டேன் என்று பக்கத்து வீட்டம்மா மதியவாக்கில் சொன்னார். மீண்டும் படுத்தேவிட்டேனாம்.. மறுபடியும் தண்ணீர் அடித்து எழுப்பி, மறுபடியும் தண்ணீரைக் குடிக்க வைத்து எழுப்பினார்கள். இப்போது ஓரளவுக்கு முகமெல்லாம் மங்களமாகத் தெரிந்தது.

அதற்குள்ளாக எனது மாப்பிள்ளை ஆமை வேகத்தில் மெதுவாக நடந்து வந்து "என்ன மாமா..?" என்றான். இது எங்க குடும்ப பழக்கம். வேறு வழியில்லாமல் அவனது தோளில் கை போட்டபடி வீடு வந்து சேர்ந்து படுத்தவன் மதியம்தான் எழுந்தேன். இப்படியொரு அவமானம் நமக்குத் தேவையா..? ராத்திரில 4 பிரெட் தின்னணே.. அது இந்த அரை சாண் வயித்துக்குப் பத்தலையா..? கொடுமையா இருக்கு..! அன்னிக்குப் பொழப்பும் போச்சு.

இப்படி ஒரு மாசமா இந்த கண்றாவிகளோட அல்லாடிக்கிட்டிருக்கேன். நேத்து மதியம் பக்கத்து வீட்டுக்காரம்மா செஞ்சு கொடுத்த கருவாடு என்னமோ என் வயித்தை செஞ்சு கொஞ்சம் பசியா சாப்பிட வைச்சுச்சு. வாந்தி வர்ற மாதிரி இருந்தா காணாமப் போனதுல கொஞ்சூண்டு சந்தோஷம். இன்னிக்கு காலைல 3 நாள் லீவுக்கு அப்புறம் ஒழுங்கு மருவாதையா ஆபீஸ்ல போய் ஆஜராயிட்டேன்..

ஆனாலும் என்ன..?
சினிமாவுக்குச் சென்று 25 நாட்களாகிவிட்டன. முடியலை.  தினத்தந்தில டெய்லி பக்கம், பக்கமாக சினிமா விளம்பரத்தைப் பார்த்தா கடுப்பா இருக்கு. நானே போக முடியாதப்ப எதுக்கு தவறாம வெள்ளிக்கிழமை படத்தை ரிலீஸ் செய்யுறானுக..?  இன்னிக்காவது போட்டோ போட்டி(படம் பரவாயில்லை. பார்க்கலாம்னு நமக்குத் தகவல்) போவலாம்னு மனசைத் தேத்திக்கிட்டு தயாரா இருந்தேன். சரியா 4 மணிக்கு தலைவலியார் தனது வேலையை ஆரம்பிச்சிட்டாரு.. டிராகனை இருக்கிறவரைக்கு தேய்ச்சுட்டு எல்லாத்தையும் மூடிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..

டாக்டரை கேட்டா வீட்டுல டஸ்ட் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன். அதுனாலதான் இப்படி அடிக்கடி வருது. ஒண்ணு வீட்டை மாத்துங்க. இல்லைன்னா வீட்டை சுத்தமா வைச்சுக்குங்க என்கிறார்.

என்னதான் வாரத்துக்கு ஒரு தடவைன்னு வீட்டைக் கூட்டினாலும் டெய்லி கிலோ கணக்குல தூசி வந்து அப்புது. இதுல எங்கே போய் தப்பிக்கிறது..? போன மாசந்தான் புத்தக அலமாரியை துடைச்சு சுத்தமா வைச்சேன். அதுக்கப்புறம்தான் இந்த தலைவலியே ஆரம்பிச்சதுன்னு டாக்டர் சொன்ன பின்னாடி யோசித்த பின்புதான் தெரிந்த்து.

இன்னும் 2 ஷெல்ப் இருக்கு. அதையும் எடுத்து.. அடுத்து 3 மாசத்துல மறுபடியும் 9 நாள் லீவெடுத்து.. அப்புறம் கடைசியா நிரந்தரமா நான் வீட்லயே இருந்திர முடியும்னு நினைக்கிறேன்.

இந்த முருகன் பயலும் ச்சும்மா இருக்கவிட மாட்டேன்றான்..! அதான் நேராவே வர்றேன்னு சொல்லிட்டனே.. அப்புறமேன்ன ஒரே அள்ளா அள்ளிட்டுப் போக வேண்டியதுதானே..? தறுதலைப் பயபுள்ளை.. போட்டு பாடாய்ப் படுத்துறான்..! ஒழுங்கா வேலைக்கு போய் நாலு பேர்கிட்ட நல்ல பேர் எடுக்க விடுடான்னா அதையும் செய்யறதில்லை. எதையாவது செஞ்சு சட்டுப்புட்டுன்னு தூக்குடான்னு சொன்னாலும் அதையும் செய்யறதில்லை..

போஸ்ட் போட்டு 1 வாரமாகப் போகுது.. இது வேற இன்னொரு பக்கம் இழுத்து வைக்குது.. ஜூலை மாசம் வெறும் 10 போஸ்ட்டுதான் போட்டிருக்கேன். ஆகஸ்ட்ல 2-தான்.. ஐயையோன்னு இருக்கு. இதை நம்பி விளம்பரத்தை வேற வாங்கிப் போட்டிருக்கேன். இப்போ அவங்களுக்கும் நான் பதில் சொல்லியாகணும்..! வேற வழியில்லை.. அதனால இருக்கிற தலைவலியோட அந்தத் தலைவலியை பத்தியே சொல்லித் தொலைக்கிறேன்..!

திட்டுறவங்க திட்டிக்குங்க..!

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger