Tuesday 13 September 2011

துப்பாக்கி முனை��ில்......!(சிறுகதை)



தில்லியிலிருந்து சென்னை செல்லும் அந்த ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சிலர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.சிலர் அமர்ந்தவாறே அரைத் தூக்க நிலையில் இருந்தனர். சிலர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தனர்.சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் வெங்கட் மட்டும் தனது மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தான் .அவன் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், பணித்திட்ட மேலாளர். எப்போதுமே அவனுக்கு ஏதாவது ஒரு வேலை,அது பற்றிய கவலை இருந்து கொண்டுதான் இருக்கும்.

"நீங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றுபவரா?" அவன் அருகில் இருந்த மனிதன் ஆர்வத்துடன் வினவினான்.

வெங்கட் அந்த மனிதனைத் திரும்பிப் பார்த்து ஆம் என்று தலையசைத்தான்.

"நீங்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு உழைக்கிறீர்கள். உங்களால் இன்று எல்லாமே கணினி மயமாகி விட்டது."

இவ்வாறு சொன்ன மனிதனை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தான் வெங்கட்.புகழ்ச்சியைக் கேட்பது அவனுக்கு எப்போதுமே பிடிக்கும்.அந்த மனிதன் ஒரு விளையாட்டு வீரன் போல் நன்கு கட்டுமஸ்த்தாக இருந்தான்.அவன் தொடர்ந்தான்.

"எனக்கு என்றுமே மிக ஆச்சரியம்தான்.நீங்கள் எல்லாம் அலுவலகத்தில் அமர்ந்து கணினியில் ஏதேதோ செய்கிறீர்கள்;அது உலகமெல்லாம் பெரிய விஷயங்களைச் செய்கிறது!"

வெங்கட் சொன்னான்"அது அவ்வளவு எளிதில்லை ;அதற்குப்பின் மணிக்கணக்கான, நாட்கணக்கான உழைப்பு இருக்கிறது"

"ஆம்! இது எனக்கெல்லாம் புரியாத சிக்கலான விஷயம்.அதற்காகத்தான் உங்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள்" அவன்.

வெங்கட்டுக்குக் கோபம் வந்தது."நீங்கள் எல்லோரும் சம்பளத்தை மட்டும் பார்க்கிறீர்கள், இப்போது இந்த ரயில் பதிவு விஷயத்தையே எடுத்துக்கொள். எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த ரயிலுக்கு வேண்டுமானாலும்,பதிவு செய்ய முடிகிறது.இதைத் தயார் செய்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்?நான் மேலாளராக இருக்கிறேன்.ஒரு புறம் வாடிக்கையாளர்,தினம் ஒரு புதிய கட்டளையுடன்,ஒரு புறம் வேறெதையோ கேட்கும் உபயோகிப்பாளர்,மற்றொரு புறம் வேலையை நேற்றே முடித்திருக்க வேண்டும் என விரட்டும் மேலதிகாரி.

துப்பாக்கி முனையில் நிற்பது போன்றது எங்கள் நிலை .உங்களுக்கு என்ன தெரியும்?"

அந்த மனிதன் ஒன்றும் பேசாமல் கண்ளை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்தவன் போல் இருந்தான்.பின் கண் விழித்தான்.பார்வை எங்கொ நிலைத்திருக்கச் சொன்னான் "தெரியும்;துப்பாக்கிகளின் முனையில் நிற்பது என்ன வென்று தெரியும்."

"அந்த இரவு, குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற எங்களுக்கு உத்தரவு வந்த போது எங்கள் பிரிவில் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மேலிருந்து சரமாரியாகச் சுட்டுக் கொண்டிருந்தனர்.எப்படியோ அந்த இடத்தைப் பிடித்து விட்டோம்,நம் கொடியையும் ஏற்றி விட்டோம்.மிச்சமிருந்தவர்கள் 4 பேர் மட்டுமே!

"நீ...நீங்கள்?'

"சுபேதார் சுஜித்.நான் என் குறிப்பிட்ட கால எல்லைக்காவல் பணியை முடித்து விட்டேன் என்று கூறி,என்னை எளிய வேலை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். முடியுமா?என் கடமையை நான் விட முடியுமா? அந்த மறக்க முடியாத நாளில் நாங்கள் பாதுகாப்புக் குழியில் பதுங்கி யிருந்தோம்.எங்களில் ஒருவர் சிறிது தூரத்தில் அடி பட்டு விழுந்து கிடந்தார்.அவரைக் குழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு என்னுடையது.ஆனால் எங்கள் கேப்டன் அது அவரது கடமை என்று சொல்லித் ,தானே அவரை எடுத்து வரச்சென்றார்.தன்னை ஒரு கவசமாக உபயோகித்துக் ,குண்டையெல்லாம் தான் ஏற்றுக் கொண்டு அவரைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டு இறந்து போனார்.

"அதற்குப் பின் அங்கு காவல் இருந்த ஒவ்வோரு நாளிலும்,என் மீது பாய வேண்டிய குண்டுகளை அவர் ஏற்றுக்கொண்டது என் கண் முன் தெரிந்து கொண்டே இருந்தது.

ஆம் ,சார்,துப்பாக்கி முனையில் நிற்பது என்னவென்று எனக்கும் தெரியும்!"

வெங்கட் திகைத்துப்போய் அமர்ந்திருந்தான்.ரயில் ஒரு நிலையத்தை அடைந்தது.

சுபேதார் சுஜித் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார் "உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.சென்று வருகிறேன்"

இறங்கிப் போய் விட்டார்.

வெங்கட் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தான்.

(ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது)



http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger