பாராளுமன்ற தேர்தல்: காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் கருத்து கணிப்பில் தகவல் parliament election bjp take more than seat congress
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற 2014–ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது முடிந்ததும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை சந்திக்க நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், இதர சிறிய கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குஜராத் முதல்– மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவர் நாடு முழுவதும் இப்போதே சுற்றுப்பயணம் செய்து கட்சி கூட்டங்களில் பேசி வருகிறார்.அதே சமயம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறியில் உள்ளது. தற்போது காங்கிரசில் ராகுல் காந்தி முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார். அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள். என்றாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கிடையே பாரதீய ஜனதா நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருப்பதால் அந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், வட மாநிலங்களில் நரேந்திர மோடி அலை வீசுவதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டி.வி. இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 2014 பாராளுமன்ற தேர்தலில் பாராதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழும் என்று தெரிய வந்துள்ளது.பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 543. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 இடங்கள் தேவை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றும். அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 186 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதே சமயம் காங்கிரசுக்கு வருகிற தேர்தலில் பெரும் இழப்பு ஏற்படும். காங்கிரசுக்கு தனியாக 102 இடங்களும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 117 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கிறது.இடதுசாரிகளுக்கு 32 இடங்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 31 இடங்களும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 25 இடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 23 இடஙகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த கருத்துக்கணிப்பின் மூலம் பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் இதர கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்ககூடிய நிலை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. எனவே ஆட்சி அமைப்பதில் மாநிலக்கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவாகவில்லை. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி விட்டன.இதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் வெளியேறிவிட்டன. சரத்பவாரின் தேசிய வாத காங்கிரசும் கூட்டணியில் நீடிப்பதா? என்ற இழுபறியில் உள்ளது. மராட்டியத்தில் இந்த இரு கட்சிகளிடையே சுமூக உறவு இல்லை.இதே போல் தேசிய அளவில் 3–வது அணி அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. எனவே இப்போதைய நிலையில் பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், கூட்டணிகள் உருவாகும் போது நிலைமை மாறும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?