Saturday 9 March 2013

ஜெர்மன் பெண் கற்பழிப்பு வழக்கில் டி.ஜி.பி மகன்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு 26 வயது ஜெர்மன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா டி.ஜி.பி.யாக இருந்த பி.பி.மொகந்தி என்பவரின் மகன் பிட்டி மொகந்தி என்பவர் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்தில் விரைவு கோர்ட்டில் அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெயிலில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு பரோலில் வெளியே வந்த பிட்டி மொகந்தி அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். இதற்கு அவரது தந்தை டி.ஜி.பி. மொகந்தியே உடந்தையாக இருக்கலாம் என ராஜஸ்தான் போலீசார் சந்தேகப்பட்டனர்.
இதுதொடர்பாக டி.ஜி.பி. மொகந்தியை கைது செய்து விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கும், மகன் மாயமானதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியதால் விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு ராஜஸ்தான் போலீசார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து பிட்டி மொகந்தியை தேடிவந்தனர். என்றாலும் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்தநிலையில் டெல்லியில் நடந்த மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பாக செய்திகள் பத்திரிகைகளில் வெளியானபோது இந்தியா முழுவதும் நடந்த பல்வேறு பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்த செய்திகளும் சேர்த்து வெளியிடப்பட்டது.
குறிப்பாக இன்டர்நெட், யூடியூப்களிலும் இந்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்டர்நெட்டில் வெளியான ஜெர்மன் பெண் கற்பழிப்பு விவகாரத்தில் தொடர்புடைய வாலிபர் ஒருவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணிபுரிவதாக சந்தேகப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் குறிப்பிட்ட வங்கி அதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில் ராஜஸ்தானில் நடந்த ஜெர்மன் பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவான குற்றவாளி பிட்டி மொகந்தி உங்கள் வங்கியில் பணிபுரிவதாக குறிப்பிட்டு இருந்தனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மொட்டை கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நபர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விலாசம் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்தது. அவரது நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த தகவல் கண்ணூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அந்த நபரை பிடிக்க சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்ணூர் போலீசார் பிடித்தனர். இந்த தகவல் உடனடியாக ராஜஸ்தான் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று மாலையில் அவர்கள் கண்ணூர் வந்து சேருவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் வந்ததும் இங்கு போலீசார் பிடித்து வைத்துள்ள நபர் பிட்டி மொகந்தி என்பவர்தான் என்று உறுதி செய்தால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
இதற்கிடையே பிட்டி மொகந்தியின் தந்தை டி.ஜி.பி. மொகந்தி கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அப்போது தலைமறைவான தனது மகன் இறந்துவிட்டதாக கூறியதால் அவருக்கு அரசு பணி ஓய்வு பலன்கள் அனைத்தையும் வழங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger