Wednesday 17 July 2013

ஏற்காடு எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்தவர் பெருமாள் (வயது63). நேற்று இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சேலத்தில் உள்ள தனது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா வீட்டுக்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்தார். பின்னர் அவர் வாழப்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

இன்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை காரில் சேலம் கோகுலம் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் பெருமாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். இதுப்பற்றி தெரிய வந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.  எம்.எல்.ஏ.வின் உடல் ஆம்புலன்சு மூலம் அவரது சொந்த ஊரான ஆத்தூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மரணம் அடைந்த பெருமாள் எம்.எல்.ஏ 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பிறந்தார்.

இவரது சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றியம் பாப்பநாயக்கன்பட்டி கிராமம் ஆகும். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு ஏற்காடு தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மீண்டும் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 3-வது முறையாக கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற்றார்.

மேலும் கடந்த 20 ஆண்டுகளாக புறநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளராக இருந்து வந்தார். தற்போது ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களிடம் நன்கு பழககூடியவர். எளிமையானவர்.

மரணம் அடைந்த பெருமாள் எம்.எல்.ஏவுக்கு சரோஜா (52) என்ற மனைவியும், ராஜேஷ்கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். இதில் ராஜேஷ்கண்ணா மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட துணை தலைவராக உள்ளார்.

சதீஷ் தர்மபுரி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடைசி மகன் கார்த்திக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் பெருமாள் எம்.எல்.ஏ. 104221 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழ்செல்வன் 66639 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger