Thursday 18 July 2013

நாகர்கோவில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

நாகர்கோவில் வடசேரி, காமராஜர் புரத்தில் டெலிபோன் ஊழியர்களுக்கான பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. சுமார் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குடியிருப்பின் மையப்பகுதியில் 150 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் இங்கு குடியிருக்கும் ஊழியர்கள் சிலர் பால் வாங்கவும், டீ குடிக்கவும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். குடியிருப்பின் மையப்பகுதி வழியாக சென்ற போது செல்போன் கோபுர உச்சியிலிருந்து ஒருவரின் கூச்சல் சத்தம் கேட்டது.
திடுக்கிட்ட ஊழியர்கள் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் ‘மழைக்கோட்டு’, தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி கையில் தண்ணீர் பாட்டிலுடன் நிற்பதை கண்டனர்.

அவர்தான் கூச்சலிட்டவர் என்பதை புரிந்துக்கொண்ட ஊழியர்கள் சிலர் செல்போன் கோபுரத்தின் அருகில் சென்று அவர், யார்? என பார்த்தனர். அப்போது கோபுரத்தின் உச்சியில் நின்றவர், அதே குடியிருப்பில் வசித்து வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக மெக்கானிக் ஜெரோம் ஜெயசீலன் (வயது 48) என்பது தெரிய வந்தது.
ஊழியர் குடியிருப்பில் கடந்த 1 ஆண்டிற்கு முன்பு நடந்த தகராறு காரணமாக பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அவரை பணியில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்திருந்தது. மீண்டும் பணியில் சேர அனுமதி கிடைக்காததால் அவர், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. உடனே குடியிருப்பு வாசிகள் போலீஸ் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மூலம் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதுபோல தீயணைப்பு உதவிக்கோட்ட அலுவலர் சரவணபாபு தலைமையில், நிலைய அதிகாரி துரை உள்பட தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் கோபுர உச்சியில் இருந்த ஊழியர் ஜெரோம் ஜெயசீலனை கீழே இறங்கி வரும்படி கூறினர்.
அதற்கு அவர், ‘என்னை பணி நீக்கம் செய்த நிர்வாகம் மீண்டும் பணி வழங்கும் உத்தரவை தந்தால் மட்டுமே கீழே இறங்குவேன். இதனை அலுவலக பொது மேலாளர் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும். இல்லையேல் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன். என்னை காப்பாற்ற முயன்றாலும் முடியாது’ என்று கூறி மிரட்டினார்.
இதனால் செய்வதறியாது திகைத்த போலீசார் ஜெரோம் ஜெயசீலனின் மனைவியை அழைத்து வர முயன்றனர். அவர், குடியிருக்கும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அது முன்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
போலீசார் கதவை தட்டிய போது ஜெரோம் ஜெயசீலனின் மனைவி வீட்டுக்குள் இருந்து எட்டிப் பார்த்தார். அவரிடம் போலீசார் ஜெரோம் ஜெயசீலன் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுவதை பற்றி கூறியதோடு அவரை சமரசப்படுத்த வருமாறு அழைத்தனர். அவரோ போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
இக்குடியிருப்பில் உள்ள சிலர் வேண்டுமென்றே என் கணவர் மீது பொய் புகார் கொடுத்தனர். 6 பேர் சேர்ந்து அவரை அடித்து உதைக்கவும் செய்தனர்.
இதுபற்றி வடசேரி போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாறாக இந்த சம்பவத்தை காரணம் காட்டி என் கணவரை பணியிலிருந்து சஸ்பெண்டு செய்து விட்டனர். அவரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கவே மறுக்கிறார்கள்.
30 ஆண்டுகளாக பணி செய்து வரும் அவருக்கு, நிர்வாகம் மீண்டும் பணி வழங்க வேண்டும். அந்த உத்தரவு கிடைத்தால் மட்டுமே அவர் கீழே இறங்கி வருவார். அதுவரை நானும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
கணவன்–மனைவி இருவருமே ஒரே கருத்தில் தீர்மானமாக இருந்ததை அறிந்த போலீசார் இந்த தகவலை உயர் அதிகாரிகள் மூலம் பி.எஸ்.என்.எல். பொது மேலாளருக்கும், மண்டல மேலாளருக்கும் தெரிவித்தனர்.
இதற்குள் நேரம் 10 மணியை நெருங்கி விட்டது. தகவல் அறிந்து மண்டல மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் கோபுரத்தில் இருந்த ஊழியருடன் பேசினார்.
அப்போது அவர் தன்னை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும், ஓராண்டு சஸ்பெண்டு செய்ததற்கு நஷ்டஈடாக ரூ.50 லட்சம் தர வேண்டும், ஊழியர் குடியிருப்பில் தன்னோடு தகராறு செய்த 6 பேர் குடும்பத்தையும் குடியிருப்பை விட்டு அகற்ற வேண்டும், எக்காரணம் கொண்டும் எனது குடும்பத்தை மட்டும் குடியிருப்பில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
இதுபற்றி பரிசீலிப்பதாக கூறிய அதிகாரி அவரை கோபுரத்தில் இறங்கி வரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் கோரிக்கையை ஏற்பதாக எழுத்துமூலம் தெரிவித்தால் மட்டுமே இறங்கி வருவேன் என்று கூறியபடி ஜெரோம் ஜெயசீலன் கூறி விட்டார்.
அதிகாலை 6 மணிக்கு ஆரம்பமான தற்கொலை முயற்சி போராட்டம் பகல் 11 மணி ஆன பிறகும் முடிவுக்கு வரவில்லை. இதனால் கோபுரத்தைச் சுற்றி போலீசாரும், பொது மக்களும் கூடி நின்றனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger