Friday 13 September 2013

குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை delhi girl rape case result

புதுடெல்லி, செப். 13- டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவியின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், வெட்கி தலைகுனியவும் வைத்தது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் ராம்சிங், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்க்ஷய் தாகூர் மற்றும் இளங்குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்க்ஷய் தாகூர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10 -ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து 11-ந்தேதி வாதம் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம். இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். தேசப்பிதா மகாத்மா காந்தி, ''இறைவன் தான் உயிரைக் கொடுக்க முடியும். அந்த இறைவனுக்குத்தான் உயிரை எடுக்கும் உரிமையும் உண்டு'' என கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார். வாழ வேண்டிய வயதில் தனது உயிரை அநியாயமாகப் பறிகொடுத்த அந்த இளம் மாணவியின் குடும்பமும், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது. இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ''குற்றவாளிகளை தூக்கில் போடப்பட்டால்தான் இந்த வழக்கில் நீதி கிடைக்கும். எங்கள் ஒரே மகளுக்கு கொடுமை இழைத்தபோது இது சரியா என அவர்கள் சிந்திக்கவில்லையே. அப்படி இருக்கிறபோது அவர்களுக்கு கோர்ட்டு ஏன் கருணை காட்டவேண்டும்?'' என கேள்வி எழுப்புகின்றனர். போலீஸ், குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா, இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனை 13-ந்தேதி (இன்று) தெரிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் தனது தண்டனை தீர்ப்பை வெளியிட்டார். அப்போது குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இது அரிதினும் அரிதான குற்றம் என்பதால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் தெரிவித்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதையொட்டி விரைவு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றவாளிகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு வெளியில் திரண்டிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். சமூக நல அமைப்புகள் இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளன. ...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger