Thursday 11 July 2013

இளவரசன் மரணத்திற்கு முன் செல்போனில் பேசியது என்ன ?

 இளவரசன்  மரணத்திற்கு முன் செல்போனில் பேசியது என்ன ?

இளவரசன் சாவில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருக்கிறது. இதையடுத்து தர்மபுரி தனிப்படை போலீசார் இளவரசனின் செல்போனை கைப்பற்றி அவர் இறந்த நாளான கடந்த 4–ந் தேதி அவருடன் யாரெல்லாம் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்று கண்டுபிடித்தனர்.
அதன்படி அவர் தனது நண்பர்களான ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, சென்னையை சேர்ந்த மனோஜ்குமார் ஆகியோருடன் அதிகநேரம் பேசியது தெரியவந்தது. இதில் கார்த்தியிடம் 1035 வினாடிகளும், மனோஜ்குமாரிடம் 900 வினாடிகளும் பேசி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.
அதன் விபரம் வருமாறு:–

இளவரசன்–திவ்யா காதல் திருமணம் செய்து கொண்ட நேரத்தில் வன்முறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்கு சித்தூரில் ஆதரவு கொடுத்தது கார்த்தி தான். பின்னர் அவர்கள் இயல்பு நிலை திரும்பி மீண்டும் தர்மபுரிக்கு வந்து விட்டனர்.
அதன் பின்னர் தான் கடந்த 3–ந்தேதி திவ்யா இனி நான் இளவரசனுடன் செல்ல மாட்டேன் என்று அறிவித்தார். இதை மறுநாள் 4–ந் தேதி பத்திரிகைகளில் படித்து பார்த்த இளவரசன் சோர்வாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் தனது நண்பர்கள் மனோஜ்குமார், கார்த்தி ஆகியோரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது இளவரசன் திவ்யா இப்படி சொல்லி விட்டாள் அவள் வராவிட்டால் நான் எப்படி வாழபோகிறேன், அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று உருக்கமாக பேசினார். அதற்கு நண்பர்கள் கவலைப்படாதே, திவ்யா மீண்டும் வருவார் என்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
ஆனாலும் திவ்யா பிரிந்து சென்றதால் தொடர்ந்து இளவரசன் வேதனை தாங்காமல் நா தழுதழுத்து பேசியிருக்கிறார். நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் ஆறுதல் அடையவில்லை.
தொடர்ந்து நண்பர்கள் 2 பேரும் இளவரசனிடம் நீ அங்கு இருந்தால் மனசு கஷ்டப்படும் எனவே நீ இங்கு வந்து விடு உனக்கு ஏதாவது வேலை வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனாலும் இளவரசனால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில் தான் அவர் இறந்து விட்டது தகவல் கிடைத்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம் என்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இளவரசன் ரெயிலில் அடிப்பட்டதை 2 பேர் பார்த்ததாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இளவரசன் ரெயிலில் அடிப்பட்டதை 2 வாலிபர்கள் பார்த்து அதை அந்த பகுதியை சேர்ந்த டேங்க் ஆப்ரேட்டரிடம் கூறியுள்ளனர். அவர் கிராம உதவியாளரிடம் கூறியுள்ளார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் என்பவர் அதியமான் கோட்டை போலீசுக்கும், சி.ஐ.டி. போலீசுக்கும் தகவல் கொடுத்து இருக்கிறார்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது இளவரசன் உடல் அருகே கிடந்த பையில் இருந்த பத்திரிகை கைப்பற்றப்பட்டது. அதில் இளவரசனுடன் செல்ல மாட்டேன் என்று திவ்யா அளித்த பேட்டி இடம்பெற்று இருந்தது. எனவே சந்தேகம் அடைந்த போலீசார் இறந்தது இளவரசனாக இருக்கலாம் என்று கருதி செல்லன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரரை அழைத்து வந்தனர். அவர் இறந்து கிடப்பது இளவரசன் தான் என்றார்.
அதன்பின்னர் தான் அவரது தந்தை இளங்கோ வரவழைக்கப்பட்டு அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். எனவே இளவரசனின் நண்பர்கள் கொடுத்த தகவலையும், தற்போது வெளியாகியுள்ள தகவலையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger